வங்கதேச கப்பலின் ராட்சத டேங்க்கில் தவறி விழுந்த தூத்துக்குடி வாலிபர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த வங்கதேச கப்பலில் உள்ள ராட்சத டேங்க்கில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த கோமஸ் மகன் சதீஷ் குமார். அவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஆக்னஸ். அவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான். ஆக்னஸ் தற்போது கர்ப்பமாக உள்ளார்.
நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள 8வது கப்பல் தளத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஆசாதுல்லா என்ற சரக்கு கப்பலில் சீனி ஏற்றுவதற்காக தொழிலாளிகள் நின்று கொண்டிருந்தனர். இரவு 9 மணி அளவில் சதீஷ் குமார் மற்றும் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கப்பலில் இறங்கி துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 1 மணி அளவில் அனைவரும் பணி முடிந்து கப்பலை விட்டு வெளியே வந்தனர். ஆனால் சதீஷ் குமார் மட்டும் வரவில்லை. இதையடுத்து அவரை கப்பலில் பல இடங்களில் தேடினர். அப்போது கீழ் தளத்தில் உள்ள ராட்சத டேங்க்கில் சதீஷ் குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு துறைமுகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சதீஷ் குமார் கப்பலில் உளள ராட்சத டேங்க்கில் தவறி விழுந்து இறந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து தூத்துக்குடி மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் விசாரணை நடத்தி வருகிறார்.