அரசியல் கட்சி துவங்கும் முடிவு ஹசாரேவுடையது தான்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: ஊழலுக்கு எதிரான தங்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முடிவு அன்னா ஹசாரேவுடையது தான் என்றும், அவரையும் தங்களையும் பிரிக்க சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஊழலை எதிர்த்து போராட குழு அமைத்த அன்னா ஹசாரே அண்மையில் தனது குழுவை கலைத்தார். லோக்பால் மசோதா குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டது. ஆனால் இனி அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் குழுவை கலைப்பதாக ஹசாரே தெரிவித்தார். ஆனால் அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் அரசியல் கட்சி துவங்குவது பிடிக்காமல் தான் ஹசாரே குழுவைக் கலைத்தார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
அன்னா அரசியல் கட்சி துவங்குவதற்கு எதிராக இருப்பதாகவும், குழுவினர் தான் அந்த முடிவை அவர் மீது திணிப்பதாகவும் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அரசியல் கட்சி துவங்குவது ஹசாரேவின் முடிவு தான். அரசியல் கட்சி துவங்க அவர் தான் வழிகாட்டியாக இருந்தார். ஹசாரே அரசியல் கட்சி துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் கட்சியே துவங்க மாட்டோம். அரசியல் கட்சி துவங்குவதால் ஊழலை எதிர்த்து சிறப்பாக போராட முடியும் என்று நினைத்தால் நீங்கள் தாராளமாக துவங்கலாம் என்று ஹசாரே எங்களிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் ஆனால் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கட்சி துவங்கினால் அதை ஆதரிப்பேன் என்றும் ஹசாரே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில் அன்னா குழுவினர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.