அதெப்படி வருவார்கள் விடுதலைப் புலிகள்... திமுக வக்கீல்களின் கிடுக்கிப்பிடி வாதம்!
அதிமுக அரசுக்கு டெசோ மாநாட்டின் மூலம் மேலும் ஒரு மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது. டெசோ மாநாட்டை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடத்த மாநகர காவல்துறை ஆணையர் தடை விதித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது திமுக.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 11 காரணங்களை முன்வைத்து தடை செய்யப்பட்டது நியாயமே என்று வாதாடியது அரசுத் தரப்பு. ஆனால் அதை மிக திறமையாக, மிக நுணுக்கமான வாதங்களை முன்வைத்து வாதாடி தவிடுபொடியாக்கியுள்ளனர் திமுக வக்கீல்கள்.
- தமிழக அரசு முன்வைத்த வாதங்களில் ஒன்று ஒரு லட்சம் பேர் மாநாட்டுக்கு வருவார்கள். அந்த அளவுக்குக் கூட்டத்தை தாங்க முடியாது. பல பிரச்சினைகள் ஏற்படும் என்பது. ஆனால் அதை திறமையாக வாதாடி, ஆதாரப்பூர்வமாக அரசின் வாதம் தவறு என்பதை நிரூபித்துள்ளனர் திமுக வக்கீல்கள்.
இதுகுறித்து திமுக சார்பில் ஆஜரான வக்கீல்களில் ஒருவர் கூறுகையில், முரசொலி மற்றும் பிற ஏடுகளில் வந்த விளம்பரங்களைப் பார்த்து இந்த அபாண்டமான வாதத்தை அரசுத் தரப்பு வைத்தது. ஆனால் நாங்கள் இத்தனை பேருக்குத்தான் அழைப்பு கொடுத்துள்ளோம். அதை வைத்திருப்போர் மட்டுமே மாநாட்டுக்கு வர முடியும். அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து ஆணித்தரமாக வாதாடினோம். அதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர் என்றார்.
- அதேபோல விடுதலைப் புலிகள், தீவிரவாதிகள் போன்றோர் மாநாட்டுக்கு வருவார்கள் என்பது அரசுத் தரப்பின் இன்னொரு வாதம். இதையும் திறமையாக வாதாடி முறியடித்துள்ளனர் திமுக வக்கீல்கள்.
இதுகுறித்து திமுக வக்கீல் கூறுகையில், இந்த மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் வருவார்கள், தீவிரவாதிகள் வருவார்கள் என்று அரசுத் தரப்பு வாதாடியது. ஆனால் இதை நாங்கள் ஆணித்தரமாக மறுத்தோம். அதாவது விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதித்துள்ள மத்திய அரசே, இந்த மாநாட்டை நடத்த தடை இல்லை, ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடை இல்லை என்று ஆட்சேபனை இல்லை என்று சான்று அளித்துள்ளது. மேலும் இந்த மாநாட்டுக்கு உலகெங்கிலுமிருந்து பலர் வருவதற்கு விசாவும் அளித்துள்ளது. அப்படி இருக்கையில், மத்திய அரசே விடுதலைப் புலிகள் வருவார்கள் என்று பயப்படாத நிலையில், தமிழக அரசு மட்டும் இப்படிச் சொல்வது எப்படி என்று வாதாடினோம். இதையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர் என்றார்.
இப்படி தமிழக அரசு முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும், திமுக வக்கீல்கள் குழு மிகத் திறமையாக அணுகி முறியடித்து டெசோ மாநாட்டுக்கு அனுமதியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.