தடை அகன்றதால் ஒய்.எம்.சி.ஏ. திடலிலேயே டெசோ மாநாடு-திமுக
நீதிமன்ற விவகாரம்
சென்னையில் திமுக ஏற்பாட்டில் இன்று ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. பின்னர் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை முடிவெடுக்கலாம் என்றும அந்த பெஞ்ச் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை சனிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுத்து மாநாட்டு அமைப்பாளர்களுக்குக் கடிதம் அனுப்பியது.
சென்னை பெருநகர காவல்துறையின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் சார்பில் அவசரவழக்கு தொடரப்பட்டது. இந்த அவசர வழக்கை விடுமுறைக்கால நீதிபதி பால்வசந்தகுமார் நேற்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அரசுத் தரப்பு மற்றும் டெசோ மாநாட்டு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பால்வசந்த குமார், ஏற்கெனவே டிவிஷன் பெஞ்ச் முன்பு வழக்கு நிலுவையில் இருப்பதால் தம்மால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி ஆவணங்களை தலைமை நீதிபதி இக்பாலுக்கு அனுப்பி வைத்தார். தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் நேற்று இரவு இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கருணாநிதி அறிவிப்பு
இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், டெசோ மாநாட்டையொட்டி இன்று காலை திட்டமிட்டபடி அக்கார்டு ஹோட்டலில் கருத்தரங்கம் நடைபெறும் என்றும் உரிய தீர்ப்பு கிடைக்கவில்லை எனில் மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே டெசோ மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார். மேலும் ஆகஸ்ட் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
ஒய்.எம்.சி.ஏ. திடலிலேயே மாநாடு
இந்த அறிவிப்பு வெளியான பின்னர், டெசோ மாநாட்டுக்கு அனுமதி கோரி அதன் அமைப்பாளர்கள் தொடர்ந்த அவசர வழக்கை நீதிபதிகள் எபிலி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று பிற்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில் திமுக மாநாட்டுக்கு போலீஸ் கமிஷனர் பிறப்பித்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக திமுகவால் அறிவிக்கப்பட்டதை மாற்றி தற்போது ஒய்.எம்.சி.ஏ திடலிலேயே மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
மாலை 4 மணிக்கு டெசோ மாநாடு தொடங்குகிறது. காலையில் நடந்த கூட்டத்தில் உருவாக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கி தலைவர்கள் உரையாற்றுவர் என்று திமுக தலைமைக் கழக செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.