மதுரை கிரானைட் "மலை முழுங்கிகளின்" பாஸ்போர்ட்டுகள் முடக்கம்
மதுரை: தமிழகத்தை உலுக்கிவரும் பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் கிரானைட் அதிபர்கள் 6 பேரின் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளில் இன்று 13-வது நாளாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களின் அளவு குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. தற்போது குவித்து வைக்கப்பட்டிருக்கும் கிரானைட் கற்களின் மதிப்பு மட்டும் ரூ50 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிரடி சோதனை
கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, பெரியசாமி, நாகராஜ், பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 23 இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்ரப்பட்டன. இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பிஆர்பி கிரானைட் குவாரி நிறுவனத்துக்கு சொந்தமான 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பி.ஆர்.பி. கிரானைட்டின் அலுஅலகம் மற்றும் மேலூர் நகர திமுக பிரமுகர் முகமது இப்ராகிம்சேட்டின் வீடு ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன. கனிம வளத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றிய சண்முகவேல், பி.ஆர்.பி. கிரானைட்டின் ஆலோசகர் லோகநாதன், ஒலிம்பஸ் குவாரியின் பங்குதாரர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பாஸ்போர்ட் முடக்கம்
தலைமறைவாக உள்ள பி.ஆர்.பழனிச்சாமி, அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 18 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இவர்களில் முக்கிய குற்றவாளிகளான 6 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடாமல் இருக்க அவர்களது பாஸ்போர்ட்டையும் முடக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.,
சிக்கும் 30 அதிகாரிகள்
இதேபோல் கடந்த 1993-ம் ஆண்டு முதல் கிரானைட் முறைகேடு நடைபெற்று வருவதும் இதுவரையிலான விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனால் கிரானைட் முறைகேட்டுக்கு துணையாக இருந்த கனிமவள அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் யார் யார் என்று பட்டியல் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 30 அதிகாரிகள் இதில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications