ஈமு கோழி இறைச்சி வரத்து குறைவு- ஹோட்டல்களில் ஈமு பிரியாணி 'மிஸ்சிங்'!
ஈமு கோழி வளர்ப்பு மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி பல ஏமாந்ததாக தகவல் பரவியது. மேலும் மோசடியில் ஈடுபட்டதாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் ஈமு கோழி வளர்ப்பில் பண்ணை உரிமையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் சென்னையி்ல் ஈமு கோழி இறைச்சியின் மூலம் பிரியாணி, கறி வகைகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. முன்னதாக ஒரு பிளேட் ஈமு கோழி பிரியாணி ரூ.130 விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஈமு கோழி இறைச்சி வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல்களின் மெனு கார்டில் இருந்த ஈமு இறைச்சி வகைகள் நீக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் மட்டுமே, ஈமு கோழி இறைச்சி வகைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டலில் ஈமு கோழி பிரியாணி விற்பனையாகி வருகிறது.
இது குறித்து அந்த ஹோட்டலின் நிர்வாக அதிகாரி கூறியதாவது,
சென்னையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஈமு இறைச்சி மூலம் செய்யப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ஈமு பிரியாணி ரூ.160, நூடுல்ஸ் ரூ.60, கட்லட் ரூ.60, சுக்கா ரூ.70, சூப் ரூ.35 என்று விற்பனை செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக ஈமு கோழி பண்ணை உள்ளதால், இறைச்சி தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்றார்.