குருத்வாரா துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களை சந்திக்கிறார் மிஷல்
விஸ்கான்சின் மாகாணம், ஓக் கிரீக் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவில் ஆகஸ்ட் 5ம் தேதி வேட் மைக்கேல்பேஜ் என்ற இனவெறி நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலியானார்கள். பின்னர் பேஜ் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அமெரிக்காவை உலுக்கி விட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் 6 பேரின் குடும்பத்தினரையும் மிஷல் ஒபாமா சந்தித்துப் பேசவிருக்கிறார். இதுகுறித்து சீக்கிய கவுன்சிலின் தலைவர் ராஜ்வந்த் சிங் கூறுகையில், மிஷல் ஒபாமா, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது எங்களை நெகிழ வைத்துள்ளது. அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம். அவரது சந்திப்பு, தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பலி கொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு பெரும் ஆறுதலாக, ஆதரவாக அமையும்.
மிஷல் ஒபாமாவும், அதிபர் ஒபாமாவும் எங்களுக்கு ஆறுதலாக நிற்பது, பரிவு காட்டுவது ஒட்டுமொத்த அமெரிக்க சீக்கிய சமுதாயத்தினரையும் நெகிழ வைத்துள்ளது என்றார்.