கல்வி உதவித் தொகை மோசடிக்கு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளே காரணம்: தலைமை ஆசிரியர்கள்
நாமக்கல்: கல்வி உதவித் தொகை மோசடிக்கு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளே காரணம் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரக் குறைவான தொழில் புரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் போலி பட்டியல் தயாரித்து கல்வி உதவித் தொகையில் ரூ.81 லட்சம் மோசடி செய்ததாக 77 பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த 2ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விளக்கம் கேட்டு கடந்த 6ம் தேதி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி நோட்டீஸ் அனுப்பினார். அதில் 15 நாளில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சஸ்பெண்டான தலைமை ஆசிரியர்கள் அனைவரும் ஒரே மாதிரி விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள விளக்கக் கடிதத்தில், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து வரும் புரோக்கர்கள் எங்களை நிர்பந்தம் செய்து, விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டனர் என்றும், அனைத்து குழந்தைகளும் கல்வி உதவித் தொகை பெற தகுதியான குழந்தைகளா என்பதை கண்டறியும் பொறுப்பு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கே உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கடிதங்களை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களைச் சேர்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவியிடம் நேரில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த உதவித் தொகை மோசடியில் தவறு செய்த தலைமை ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்களா அல்லது சட்டத்தின் ஓட்டைகளை வைத்து தப்பிச் சென்றுவிடுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.