கத்ரீனாவால் பேரழிவைச் சந்தித்த நியூ ஆர்லியன்ஸை மிரட்டும் ஐசக் புயல்
நியூ ஆர்லியன்ஸ்: கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கத்ரீனா புயலால் பேரழிவைச் சந்தித்த நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தை நோக்கி ஐசக் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஐசக் என்ற புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் அமெரிக்காவின் லூசியானா, மிசிசிப்பி மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களை தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 3 மாநிலங்களிலும் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
ஐசக் தற்போது நியூ ஆர்லியன்ஸ் மாநிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்து. இது நியூ ஆர்லியன்ஸை தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கத்ரீனா புயல் தாக்கியதில் நியூ ஆர்லியன்ஸ் பேரழிவைச் சந்தித்தது. அதில் இருந்தே இன்னும் முழுமையாக மீண்டு வரமுடியாத நிலையில் தற்போது ஐசக் தாக்கவிருக்கிறது.
கடற்கரையோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கத்ரீனாவின் தாக்கத்தில் இருந்து மீளாத நியூ ஆர்லியன்ஸ் மக்கள் ஐசக்கால் அச்சத்தில் உள்ளனர்.