சாமி, 100வது ராக்கெட் சோதனை வெற்றிபெறட்டும்: திருப்பதியில் இஸ்ரோ தலைவர் பிரார்த்தனை
திருப்பதி: இந்தியாவின் 100வது ராக்கெட் நல்லபடியாக விண்ணில் பாய வேண்டி இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று பிரார்த்தனை செய்தார்.
இஸ்ரோ தான் தயாரித்த செயற்கைகோளான ஆர்யப்பட்டாவை ரஷ்ய ராக்கெட்டில் வைத்து 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ நாளை காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துகிறது.
பிஎஸ்எல்வி-சி21 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ராக்கெட் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக்ககோளை தாங்கிச் செல்கிறது. இந்நிலையில் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய வேண்டி இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவுவதற்கு முன்பு ராதாகிருஷ்ணன் திருப்பதி வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் கண்டு மகிழவிருக்கிறார்.