தீவிரவாதிகள் கடல் வழியே இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம்; பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கை
டெல்லியில் இன்று நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
காவல்துறை சட்டம் அமலுக்கு வந்து 150 ஆண்டுகளாகின்றன. நாட்டின் காவல்துறைக்கு 150 ஆண்டுகள் ஆவதையொட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு விருதுகள் வழங்கப்படும்.
பல்வேறு இனம், மதங்களுடன் நாடு இருப்பதுதான் நமக்குப் பெருமை. ஆனால் அண்மைக்காலமாக இன மோதல்கள் தூண்டிவிடப்படுகின்றன. அசாமில் இன மோதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மும்பையில் வன்முறை நிகழ்ந்தது. இதனால் வடகிழக்கு மாநிலத்தவர் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளியேறக் கூடிய ஒரு நிலைமை உருவானது. கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் இந்த இனமோதல் மிகவும் கவலைக்குரியது.
சமூக வலைதளங்கள் மூலம் பல்க் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் மோதல்களைத் தூண்டிவிடுவது என்பது புதிய சவாலாக இருக்கிறது. சமூகவிரோதிகள் எப்படி இத்தகைய ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து நாம் கவனமாக கண்காணிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இவற்றை எதிர்கொள்ள வலுவான வியூகம் வகுக்கப்பட வேண்டும்.
இடதுசாரி தீவிரவாதிகளின் வன்முறை செயல்களும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் 7 மாநிலங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் கவலைக்குரியது. துணை இராணுவப் படையினரும் மாநிலங்களின் காவல்துறையினரும் இந்த இடதுசாரி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் காவல்துறையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதும் ஆயுதங்கள் உள்ளிட்ட தேவையான கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க வேண்டும்.
இதேபோல் ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில் ஊடுருவல்களும் அதிகரித்து வருகின்றன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையும் சர்வதேச எல்லையையும் தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தொடர்ச்சியான நடவடிக்கையால் வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால்தான் அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடந்தது.
மும்பை, டெல்லியில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். புனேயில் இந்த ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயமும் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனால் நிலப்பகுதியில் மட்டுமின்றி கடல் எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பை அதிகப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
கடந்த 30 மாதங்களில் 3.9 லட்சம் பேர் காவல்துறை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்த 6.35 லட்சம் பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களில் காவல்துறையில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெருநகரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது கவலைக்குரியது. இதைப் பற்றி கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற காவல்துறை தலைவர் மாநாடுகளிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதனால் பெருநகரங்களில் பணியாற்றும் காவல்துறையினர் இத்தகைய திட்டமிட்ட குற்றச் செயல்களை குறிப்பாக பெண்கள், முதியவர்களுக்க் எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றார் அவர்.