போராட்டத்தின்போது இறந்தால் ரூ.5 லட்சம்: கூடங்குளம் போராட்டக்குழு கடலோர கிராமங்களில் தண்டோரா
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்தப் போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து அணு மின் நிலையம் முன்பு 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களுக்கு பஸ் வசதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாளைய போராட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட கடலோர கிராம மக்கள் கடல் வழியாக படகு மூலம் இடிந்தகரை வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நாளைய போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்பட்டு யாராவது இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று போராட்டக் குழுவினர் இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று தண்டோரா போட்டுள்ளனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக் குழு ஒன்றையும் அமைத்துள்ளனர்.