தேடப்படும் குற்றவாளி டக்ளஸின் இருப்பிடத்தை சுஷ்மா ஸ்வராஜ் மூலம் கண்டறியக் கோரி வழக்கு
சென்னை: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இருப்பிடத்தை அவரை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் விசாரித்து கண்டறிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ஏ.இருளாண்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கியிருந்தார். அப்போது நடைபெற்ற கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக சென்னை மாஜிஸ்திரேட்டு மற்றும் செசன்சு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் நீண்ட காலமாக அவர் ஆஜராகவில்லை என்பதால் டக்ளஸ் தேவானந்தாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. எனவே அவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இந்தநிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் சில எம்.பி.க்களுடன் 16.4.12 அன்று இலங்கை சென்றார். அங்கு நடந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையை கண்டறிவதற்காக அந்த குழு இலங்கைக்கு சென்றது. இலங்கை அதிபரையும் சந்திக்க அந்தக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்தநிலையில் டக்ளஸ் தேவானந்தாவை, சுஷ்மா சுவராஜ் மற்றும் எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர். இது அவருக்கு மறைமுகமாக உதவுவது போன்ற நிகழ்வாகும். தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை சந்திப்பது குற்றம். எனவே இந்த குழுவினரை போலீசார் விசாரித்தால் டக்ளஸ் தேவானந்தாவின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடியும். அவரை கைது செய்து வழக்கை எதிர்கொள்ளச் செய்ய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 8 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.