சிவகாசி வெடி விபத்து வழக்கு: ஆலை உரிமையாளர் அதிமுக கவுன்சிலர் கோர்ட்டில் சரணடைய முடிவு?
விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 38 பேர் உடல் கருகி பலியாகிய வழக்கில் ஆலையின் உரிமையாளரான அதிமுக கவுன்சிலர் முருகேசன் நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் சுமார் 10 ஏக்கரில் அமைந்துள்ளது ஓம் சக்தி பட்டாசு ஆலை. சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு ஆலைகளில் ஓம் சக்தி பட்டாசு ஆலையும் ஒன்று. அங்கு சுமார் 300 பேர் பணியாற்றினர். கடந்த புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பலியாகினர்.
இந்த வழக்கில் ஆலையை குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி, அவரது தம்பிகள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆலை உரிமையாளர் சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசன் தலைமைறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முருகேசன் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடையப் போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாறு வேடத்தில் நீதிமன்றத்தை தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் அவர் சரணடைய வரவில்லை. இருப்பினும் போலீசார் நீதிமன்றத்தை கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications