ராஜபக்சே வருகையை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேசத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வரும் 20ம் தேதி இந்தியா வருகிறார். அவரது வருகைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்திய அரசே இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே, தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதே, போர்க் குற்றவாளி ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் கையிலேந்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அங்கே நடைபெறும் விழாவிற்கு பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ராஜபக்சேவை அழைத்திருப்பதால் திருமாவளவன் நடத்திய ஆர்ப்பாட்டம் அவ்விடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அரை மணிநேர ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு நேற்று சரியாக 11 மணியளவில் மக்களவை கூடியதும் அவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே சென்று ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்க வேண்டாம் என்று அவர் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். பிறகு ஓரிரு நிமிடங்களில் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் 12 மணிக்கு அவை கூடியதும் திருமாவளவன் அதே அட்டையை ஏந்தியவாறு மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே நின்று, போர்க் குற்றவாளி ராஜபக்சேவை அழைக்காதே! என்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் லிங்கமும் இதே கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பினார். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் திருமாவளவன் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிர்ப்புக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.