பள்ளி முன்பு விளையாடிய சிறுவனை கடத்த முயன்ற வாலிபர்: துரத்திப் பிடித்த பொதுமக்கள்
நெல்லை: மானூர் அருகே பள்ளி முன்பு விளையாடிக் கொண்டிருந்த பள்ளி சிறுவனை தூக்கிக் கொண்டு ஓடிய வடமாநில வாலிபரைப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள வடக்கு வாகைக்குளத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி முன்பு நேற்று மாலை ஒன்றாம் வகுப்பு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் திடீரென ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒருவனை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைப் பார்த்த ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.
அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த வாலிபர்கள் அந்த வடமாநிலத்தவரை விரட்டிப் பிடித்து அவரை நையப் புடைத்து சிறுவனை மீட்டு ஆசிரியைகளிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
பள்ளிக்கு முன்பு விளையாடிய சிறுவனை ஆசிரியைகள் கண் முன்பே ஒருவர் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications