மன்மோகன் சிங்கின் சொத்து அதிகரிக்கவில்லை, மதிப்பு மட்டுமே: பிரதமர் அலுவலகம் விளக்கம்
அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சொத்து மதிப்பு விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி அவரிடம் ரூ.10,73,88,730.81 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இது கடந்த ஆண்டு மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். அவரது டெல்லி மற்றும் சன்டிகர் வீடுகளின் மதிப்பு ரூ.7.27 கோடி ஆகும். மேலும் அவர் ரூ.3.46 கோடி அளவில் முதலீடு மற்றும் வங்கிக் கணக்குகளில் சேமிப்பு வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் தன்னிடம் ரூ.5.11 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக அறிவித்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலவரப்படிஅவரிடம் சன்டிகர் மற்றும் தெற்கு டெல்லியில் ரூ.1.78 கோடி மதிப்புள்ள வீடுகள், ரூ.2.75 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவை இருந்தன.
இது தவிர அவர் தனது பூர்வீக சொத்துக்கள், வங்கி சேமிப்பு மற்றும் மாருதி 800 கார் ஆகியவற்றை தனது சொத்து பட்டியலில் சேர்த்துள்ளார். பிரதமரின் தற்போதைய சொத்து மதி்ப்பை பார்க்கையில் அவரது அமைச்சரவையில் உள்ள பலர் அவரைவிட பணக்காரர்களாக உள்ளனர். மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலிடம் ரூ.52 கோடி சொத்தும், சரத் பவாரிடம் ரூ.22 கோடியும், மு.க. அழகிரியிடம் ரூ.9.50 கோடி சொத்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ரூ.5.11 கோடி சொத்து வைத்திருந்த பிரதமர் தற்போது இரணடு மடங்காக ரூ.10,73,88,730.81 மதிப்புள்ள சொத்து வைத்துள்ளாரே. அது எப்படி ஒரேயாண்டில் அவரது சொத்து இரண்டு மடங்காக அதிகரித்தது என்று பிரச்சனை எழுந்தது. இதையடுத்து பிரதமர் அலுவலகம் கூறுகையில், பிரதமரின் சொத்துக்கள் அதிகரிக்கவில்லை அவரிடம் ஏற்கனவே உள்ள சொத்துக்களின் மதிப்பு தான் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.