கூடங்குளம் தாக்குதலைக் கண்டித்து தமிழகம், புதுவையில் மறியல்- ஆர்ப்பாட்டம்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடியோர் மீது போலீஸ் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர், மணப்பாடு, புன்னக்காயல், வேம்பார் போன்ற பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும்இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகுகள், நாட்டு படகுகள் கரையில்நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகை மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பனில் மீனவர்கள் தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.
கோவையிலும் 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுகவினர், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்தோர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.