கூடங்குளம்: ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் மேலும் 1000 போலீஸார் குவிப்பு

ஏற்கனவே 9 மாவட்ட போலீஸார் கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நேற்று கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே சுனாமி காலனி கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் கலவரம், அதைத் தொடர்ந்து இடிந்தகரை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து தற்போது மேலும் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மேலும் 1000 போலீஸார் தற்போது கூடங்குளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர கோவையிலிருந்து 200 மத்திய அதி விரைவு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் போக சென்னை வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பனும் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது கூடங்குளத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளார். தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ், நெல்லை சரக டிஐஜி வரதராஜு மற்றும் 3 மாட்ட எஸ்.பிக்கள் தலைமையில் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன், எஸ்.பி. அஸ்ரா கார்க் உள்ளிட்டோர் தலைமையிலான கூடுதல் படையினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், கூடங்குளம் பகுதியிலும் பாதுகாப்புப் பணியைக் கவனித்து வருகின்றனர்.
இவர்கள் தவிர டிஐஜிக்கள் ஜான் நிக்கல்சன், பெரியய்யா, அருண், சென்னை துணை கமிஷனர்கள் மகேஸ்வரன், பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் 6 மாவட்ட எஸ்.பிக்களும் கூடங்குளம் பகுதியில் குவிந்துள்ளனர்.
மொத்தத்தில் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகள் போலீஸாரின் கட்டுக்குள் வந்துள்ளன.












Click it and Unblock the Notifications