அணு உலை செயல்பட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது: வைகோ
கூடங்குளம் அணு உலை செயல்பட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். அணு உலையை மூடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக திங்கட்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதில் போராட்டக்குழுவினர் பலர் பலத்த காயமடைந்தனர். இதனைக் கண்டித்து கரூரில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
அறவழிப் போராட்டம்
கூடங்குளம் பகுதி மக்கள் 365 நாளும் அறவழியில் பல்வேறு போராட்டம் நடத்தினர். திங்கட்கிழமையன்றும் அவர்கள் அறவழியில்தான் போராட்டம் செய்தனர். ஆனால் அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டும் வீசி உள்ளனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் இறந்து உள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தில் வெளிநாட்டு சதி உள்ளதாக உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே கூறி உள்ளார். அவர் அதனை உறுதிப்படுத்த வேண்டும். போராட்டக்காரர்கள் மாயவலையில் சிக்கி உள்ளதாக தமிழக முதல்வர் கூறி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பான வளையத்தில்தான் உள்ளனர்.
போராட்டம் தொடரும்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடவேண்டும். அணு உலை தேவை இல்லை என்பதுதான் ம.தி.மு.க.வின் கருத்து. மாநில அரசு இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். போராட்டக்காரர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். கூடங்குளத்தை மூடும் வரை எங்களது பல்வேறு கட்ட போராட்டம் தொடரும்
தடியடி, துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசும் காவல் துறையும்தான் பொறுப்பு. இவ்வாறு வைகோ கூறினார்.