முறைகேடாக மருத்துவ கல்லூரிக்கு அனுமதி: அன்புமணி வழக்கில் அக்டோபர் 30 முதல் நாள்தோறும் விசாரணை
இந்த முறைகேடு வழக்கு நேற்று நீதிபதி தல்வந்த்சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அன்புமணி ராமதாஸ், முன்னாள் சுகாதாரத் துறைத் துணைச் செயலர் கே.வி.எஸ். ராவ், அமைச்சத்தின் செக்ஷன் அதிகாரி சுதர்சன் குமார், டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ். தூபியா, டி.கே. குப்தா, இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரித் தலைவர் சுரேஷ் பதோரியா, முன்னாள் டீன் எஸ்.கே. டோங்கியா, இயக்குநர் கே.வி. சக்சேனா, நிர்வாகிகள் நிதின் கோத்வால், பவன் பம்பானி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
குற்றம்சாட்டப்பட்டோருக்கு, சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்கள் கிடைத்ததை அவர்களின் வழக்குரைஞர்கள் மூலம் நீதிபதி உறுதிப்படுத்திக் கொண்டார். இந்த வழக்கின் வாதங்களைத் தனித்தனியாகத் தொடர தேதி ஒதுக்கும்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியை கேட்டுக் கொண்டனர்.
ஆனால், அதை நிராகரித்த நீதிபதி தல்வந்த் சிங், அக்டோபர் 30-ந் தேதி முதல் அனைத்து நீதிமன்ற வேலை நாள்களிலும் இந்த வழக்கு விசாரணை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்றார்.