அரசியலுக்கும் வரவில்லை, நாடாளுமன்றத் தேர்தலி்லும் போட்டியிடவில்லை: பிரியங்கா காந்தி
டெல்லி: வரும் 2014ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இத்தனை நாட்களாக தனது தாய் சோனியா காந்திக்கும், சகோதரர் ராகுல் காந்திக்கும் ஆதரவாக பிரச்சாரம் மட்டுமே செய்துவந்த பிரியங்கா காந்தி வரும் 2014ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று செய்தி நேற்று காட்டுத் தீ போன்று பரவியது. இதையடுத்து பிரியங்கா முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் இல்லாமலேயே கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை எனது தாயின் தொகுதியை பார்த்துக் கொண்டிருந்தேன். தற்போதும் அதைத் தான் செய்கிறேன். ரேபரேலி மற்றும் அமேத்தியில் உள்ள தொழிலாளர்களிடம் நான் பேசுவது ஒன்றும் புதிதன்று. ரேபரேலியில் சில பிரச்சனை இருப்பதால் நான் அவ்வப்போது அங்கு சென்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பிரியங்கா சோனியா காந்தியின் தொகுதியில் வாரா வாரம் மக்களை சந்தித்து பேசினார். இதனால் தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி பரவியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டதில் இருந்து சோனியா காந்தி பொதுக்கூட்டங்களில் அவ்வளவாக கலந்துகொள்வதில்லை. அதனால் தான் பிரியங்கா ரேபரேலியில் அடிக்கடி கூட்டம் நடத்துகிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications