கட்சி காணாமல் போவதைத் தடுக்க தெலுங்கானா எதிர்ப்பை கைவிடுகிறார் சந்திரபாபு
ஆந்திராவில் தெலுங்கானா பகுதிகளை ஒருங்கிணைத்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கான போராட்டங்களும் வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிதான் தெலுங்கானா கோரிக்கையில் தீவிரம் காட்டி வந்தது. பின்னர் பாஜகவும் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்திருந்தது. தெலுங்கானாவை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று நம்பியிருந்த தெலுங்கான ராஷ்டிரிய சமிதி பின்னர் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி அந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில் தொடக்கத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைந்து தெலுங்கானா கோரிக்கையை ஆதரித்த தெலுங்குதேசம் கட்சித் தலைவ சந்திரபாபு நாயுடு பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்ற நிலையில் சந்திரபாபு தமது தெலுங்கானா எதிர்ப்பைக் கைவிட்டு வருகிறார்.
மேலும் தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பல எம்.எல்.ஏக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கட்சியைக் காப்பாற்றவும் தேர்தலை எதிர்கொள்ளவும் வேறுவழியின்றி தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு எதிர்ப்பான நிலையை கைவிட சந்திரபாபு முடிவு செய்திருக்கிறார். மேலும் தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.