குரும்பூர் சாஸ்தா கோயிலில் தங்க, வைர, வெள்ளி நகைகள், ரூ.25,000 கொள்ளை
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் சாஸ்தா கோயிலில் தங்க, வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலத்தில் பிரபல அருள்மிகு நரசிங்க மூர்த்தி சாஸ்தா கோயில் உள்ளது. இக்கோவிலில் வழக்கம் போல் இரவு பூஜைகளை முடித்து விட்டுபூசாரி தாணு கோயில் கதவை பூட்டிவிட்டு தனது வீட்டிற்குச் சென்றார்.
நேற்று அதிகாலை அவர் கோயிலுக்கு வந்து பார்த்தபோது கீழ் வாசலில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கதவு உடைக்கப்பட்டு சாமி அறை பீரோவில் வைத்திருந்த வைரக்கல் மூக்குத்தி, வைரக்கல் நாமம், 16 வெள்ளி கவசம், 5 பவுன் தங்க நகை மற்றும் பொருட்கள், ரூ.25,000 ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து அவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.