நாயுடுவின் 'தெலுங்கானா கடிதத்தால்' கோபம்: தெ.தேசம் எம்.பி ராஜினாமா
சித்தூர்: தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக உறுதிமொழி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதில் அதிருப்தியடைந்த தெலுங்கு தேசம் கட்சியின் 2 முக்கிய தலைவர்கள் திடீரென கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்கள் ஆதரவை அதிகரித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 2ம் தேதி முதல் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளார். சித்தூர் மாவட்டம் இந்துபுராவில் இருந்து தனது பாத யாத்திரையை சந்திரபாபு நாயுடு துவங்க உள்ளார்.
இந்த நிலையில் தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக சந்திரபாபு நாயுடு, பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் தனி தெலுங்கானா அமைப்பு தொடர்பாக உறுதிமொழி அளித்துவிட்டு, அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. எனவே அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டி, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தெலுங்குதேசம் கட்சியில் தனி தெலுங்கானாவை எதிர்த்து வரும் கட்சி தலைவர்களிடையே, சந்திரபாபு நாயுடுவின் கடிதம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சித்தூர் மாவட்ட தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பையாரெட்டி ராஜசேகர ரெட்டி மற்றும் பலமநேரு தொகுதி எம்எல்ஏ அமர்நாத் ரெட்டி ஆகியோர் தங்களின் கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் தங்களின் ராஜினமா கடிதங்களை, தெலுங்கு தேசம் கட்சியின் மேலிடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இருவரும் தங்களின் ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ஆந்திர மாநிலத்தின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தை, கட்சி தலைமை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் கட்சியில் உள்ள பல தலைவர்களும் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது. ராயல்சீமா பகுதிகளை நீண்டகாலமாக சந்திரபாபு நாயுடு விமர்சித்து வருகிறார். அவரது நடவடிக்கைகளை பார்த்து கொண்டு கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
தனி தெலுங்கானா பிரச்சனை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதும் முன் கட்சியில் ஆந்திரா, ராயல்சீமா பகுதிகளை சேர்ந்த கட்சி தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு கலந்து ஆலோசிக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் வரும் 2ம் தேதி முதல் பாத யாத்திரை நடத்த சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ள நிலையில், 2 கட்சி தலைவர்கள் ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.