குஜராத் போலி என்கவுன்டர் வழக்கு: அமித் ஷா மீதான விசாரணை மும்பைக்கு மாற்றம்
டெல்லி: குஜராத்தில் சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணையை குஜராத் மாநிலத்திலிருந்து மும்பைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
குஜராத்தை சேர்ந்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பீ ஆகியோர் ஹைதராபாத்தில் இருந்து குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே தீவிரவாத தடுப்பு போலீசாரால் கடத்தி வரப்பட்டு, கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் அமித் ஷாவை 2010ம் ஆண்டு ஜுலை 25ம் தேதி கைது செய்தது. அவர் 3 மாத காலம் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கைதானதைத் தொடர்ந்து அமித் ஷா அமைச்சர் பதவியை இழந்தார்.
இந் நிலையில் அமித் ஷாவுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், அமித் ஷா பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதித்திருந்தது.
இந் நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அப்தாப் ஆலம், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அமித் ஷாவின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டனர். இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் நடக்கவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி அமித் ஷா குஜராத்துக்கு செல்லவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கின் விசாரணையை குஜராத் மாநிலத்திலிருந்து மும்பைக்கு மாற்றவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
அமித் ஷா, முதல்வர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சொராபூதீன் கொலை வழக்கில் சாட்சியான துள்சிராம் பிரஜாபதி என்பவரும் என்கெளண்டரில் கொல்லப்பட்டதும், ஆனால், அதையும் மறைக்க குஜராத் போலீசார் முயன்றதும் குறிப்பிடத்தக்கது.