அரசியல்வாதியை மிஞ்சிய கரூர் கலெக்டர் ஷோபனாவுக்கு அரைகுறை 'கல்தா'
தமிழகத்தில் உள்ள 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதில் கரூர் மாவட்ட கலெக்டராக சென்னை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் கலெக்டராக ஷோபனா இருந்து வந்தார். தற்போது அவரை மாற்றியுள்ளனர். ஆனால் அவருக்குப் புதிய பொறுப்பு தரப்படவில்லை, காத்திருப்போர் பட்டியலிலும் அவரை வைக்கவில்லை. மாறாக தொங்கலில் விட்டுள்ளனர்.
ஷோபனா மாற்றம் குறித்து அதிகார வட்டத்தில் விசாரித்தபோது சிலர் கூறுகையில்,
தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றபோது அதை பாராட்டி கரூரில் டிஜிட்டல் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதாக கலெக்டர் ஷோபனா பெயர் அடிபட்டது. ஆனால் இதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
அரசு அதிகாரிகளாக செயல்படக் கூடியவர்கள் அரசியல் சார்பு இன்றி செயல்பட வேண்டும். மக்கள் சேவை செய்பவர்களுக்கு அரசியல் எதற்கு. இவர்கள் எதையோ எதிர்பார்த்து தான் இப்படி செய்துள்ளார்கள் என்று பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக திமுக ஷோபனாவின் பேனர் விவகாரத்தை கடுமையாக விமர்சித்தது. அரசியல்வாதிகளையே ஷோபனா மிஞ்சிவிட்டார் என திமுக விமர்சித்தது.
இந்த நிலையில்தான் ஷோபனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஆளும் கட்சி செல்வாக்குள்ளதால் அவர் மீண்டும் ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு கலெக்டராகவோ அல்லது தமிழக அரசின் முக்கிய பொறுப்புகளிலோ இடம் பெறுவார் என்று அடித்துக் கூறுகின்றனர்.