மு.க.அழகிரி மகனைத் தேடி வரும் தனிப்படையின் இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்!

அரசுக்கு ரூ. 16,000 கோடி அளவுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய கிரானைட் கற்கள் மோசடி தொடர்பாக முன்னாள் ஆட்சித் தலைவர் சகாயம் அரசுக்கு அறிக்கை கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தற்போதைய ஆட்சித் தலைவர் அன்ஷுல் மிஸ்ரா இதில் நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இதையடுத்து அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டன. இந்த முக்கியமான வழக்கில் பிஆர்பி கிரானைட்ஸ் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தி்ல மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் உள்ளிட்டோரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். துரை தயாநிதியின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. எனவே துரையைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்ப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்தநிலையில் மதுரையிலேயே திமுக பிரமுகர்கள் வீட்டில் துரை தயாநிதி பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், டி.வி.எஸ். நகரில் உள்ள தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் வீட்டில் தனிப்படை இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல வில்லாபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திமுக முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் போலீசார் துரைதயாநிதியை தேடி சோதனை நடத்தினர்.
இந்தப் பின்னணியில் திடீரென இன்ஸ்பெக்டர் மாடசாமியை இடமாற்றம் செய்து விட்டனர். அவருக்குப் பதில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மேலூருக்கு மாற்றப்பட்டு அவரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல அப்பன்திருப்பதி, மேலவளவு, செக்கானூரணி, விக்கிரமங்கலம் போலீஸ் நிலையங்களை கவனித்து வந்த போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசாரையும் மாற்றம் செய்துள்ளார் மதுரை புறநகர் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.
பிஆர்பி மீது மேலும் 2 வழக்குகள்
இதற்கிடையே பி.ஆர்.பழனிச்சாமி மீது மேலும் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை (நீர்வளம்) இளநிலை உதவியாளர் ராமச்சந்திரன், மதன் ஆகியோர் மேலூர் போலீசில் புகார் மனு ஒன்று கொடுத்தனர். அதில்,
மேலூரில் உள்ள பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான கிரானைட் குவாரி அருகே பாசன வாய்க்கால் உள்ளது. அதனை சேதப்படுத்தி ஆக்கிரமித்து உள்ளார். அதுபோல வேப்பங்குடி பகுதியில் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான கிரானைட் குவாரி உள்ளது. இங்குள்ள பாசன வாய்க்காலையும் சேதப்படுத்தி ஆக்கிரமித்து விட்டார் என குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து பி.ஆர்.பி மீது போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதுவரை பழனிச்சாமி மீது 19 வழக்குகள் பாய்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு எந்த வழக்கிலும் இதுவரை ஜாமீ்ன் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications