டெல்லியில் மின், குடிநீர் கட்டண செலுத்தாமல் ஒத்துழையாமை இயக்கம்: கெஜ்ரிவால் கச்சேரி ஆரம்பம்
அண்மையில் டெல்லி மாநில அரசு மின் கட்டணத்தையும் குடிநீர் கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனிக் கட்சி தொடங்கிய அர்விந்த் கெஜ்ரிவால் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். மின் மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாமல் அரசுக்கு எதிராக போராடும் இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக டெல்லியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் மின் இணைப்பு கொடுத்தார்.
அப்போது பேசிய கெஜ்ரிவால், மின் கட்டணத்தைக் கட்டாத ஏழைகளின் வீடுகளில்தான் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் முன்னாள் எம்.பி.க்கள் ஏராளமானோர் மின் கட்டணத்தை கட்டாமல் இருக்கின்றனர். அவர்கள் வீட்டு மின் இணைப்பை ஏன் துண்டிக்கவில்லை? மின் கட்டண உயர்வை நவம்பர் 3-ந் தேதிக்குள் திரும்பப் பெறாவிட்டால் 4-ந் தேதியன்று முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீண்டும் இணைத்ததற்காக எந்த தண்டனையையும் ஏற்க நான் தயார் என்றார் அவர்.