பிரதமர் மன்மோகன்சிங்குடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் குழு சந்திப்பு
டெல்லி: இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிட நேரம் நீடித்தது. இச்சந்திப்பின் போது இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மன்மோகன்சிங் எடுத்து விளக்கினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் இது தொடர்பாக கூறியதாவது:
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாக அமைந்தது. இலங்கையில் தமிழர்கள் அமைதியான சூழ்நிலையில் கவுரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இதில் இருந்து இந்தியா ஒரு போதும் பின்வாங்காது என்றும் பிரதமர் மன்மோகன்சிங் எங்களிடம் உறுதியாக கூறினார். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல் அரசியல் ரீதியிலான தீர்வு காண்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உறுதியாக இருப்பதாக நாங்கள் தெரிவித்தோம். ஆனால் எதிர்மறை செயல்பாடுகள் நீக்கப்படும் என்ற வாக்குறுதி இலங்கை அரசு தரப்பில் இருந்து அளிக்கப்பட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தையும் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்தோம். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண தயாராக இருக்கும் அதே நேரத்தில் இலங்கை அரசால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். அதையும் எடுத்து கூறினோம் என்றார் அவர்.
இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தமிழ் எம்.பியான அடைக்கலம் செல்வநாதன், "இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கென்று தனித்துவம் உண்டு. அதை இந்தியாவும் மதிக்கிறது. அவர்களுடைய வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கவேண்டும். அதனைத்தான் நாமும் விரும்புகிறோம். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்திய அரசும் இணைந்து செயற்படவேண்டும்'' என்று மன்மோகன்சிங் கூறியதாகத் தெரிவித்தார்.