இந்திய துறைமுகங்களில் முதலீடு செய்ய இலங்கை திடீர் ஆர்வம்- வேவு பார்க்க சதியா?
டெல்லி: இலங்கை அரசின் துறைமுக அதிகாரசபையானது இந்திய துறைமுக அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் திடீரென இந்திய துறைமுகங்களில் இலங்கை முதலீடு செய்ய முன்வருவது பெரும் சந்தேகத்துக்குரியது என்றும் கப்பல்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் துறைமுகங்களுக்கு போட்டியாக இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதில் சீனா அதிக அக்கறைகாட்டி வருகிறது. குறிப்பாக இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பந்தோட்டா துறைமுகங்களை சீனா கைப்பற்றி இருக்கிறது. இந்தியாவும் கூட யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை சீரமைக்க முன்வந்திருக்கிறது.
இந்த நிலையில் திடீரென இந்தியாவின் துறைமுகங்களில் குறிப்பாக இலங்கைக்கு போட்டியான துறைமுகங்களாகக் கருதப்படும் கேரள மாநிலத்தின் கொச்சி மற்றும் விழிஞ்சம் துறைமுகங்களில் முதலீடு செய்ய இலங்கை முன்வந்திருக்கிறது. இந்தத் துறைமுகங்களின் வளர்ச்சியானது இலங்கைக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆனாலும் இந்த துறைமுகங்களை இலங்கை குறி வைப்பது ஏன் என்பதுதான் சந்தேகத்துக்குரியது என்கின்றனர் கப்பல்துறை அமைச்சக அதிகாரிகள்.
சீனாவுக்காக இந்தியாவை வேவுபார்க்கத்தான் இலங்கை இத்தகைய முதலீட்டுத் திட்டங்களை அரங்கேற்றுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து ஏற்கெனவே இந்தியாவின் கடற்படை தளங்களை வேவுபார்க்கும் வகையில் பாகிஸ்தான் வேவு தளம் அமைத்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்குள்ளே ஊடுருவுவது என்பதுதான் தேசப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிடும் என்றும் உளவுத்துறையினர் எச்சரிக்கையும் விடுத்திருப்பதாகவும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன.