நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற வைகோ கைது
காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை தர மறுத்து கர்நாடக அரசு முரண்டு பிடிப்பதைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு, தமிழ்நாட்டின் நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், முற்பகல் 11 மணிக்கு வைகோ தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
நகரிய அலுவலகத்திலிருந்து அனல் மின் நிலையத்திற்கு வைகோ உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர். அங்கு அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
20ம் தேதி வேல்முருகன் தலைமையில் மாபெரும் முற்றுகை
இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 20-ந் தேதியன்று நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்துக்கு உரிய காவிரி நதிநீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்து அடாவடித்தனம் செய்து வருகிறது கர்நாடக அரசு. இந்தியாவின் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவையோ, உச்சநீதிமன்ற உத்தரவையோ, நடுவர் மன்றத் தீர்ப்பையோ மதிக்காமல் சட்டாம்பிள்ளைத்தனமாக காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்குரிய காவிரி நீரை மறுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு நிற்கின்றன.
நாட்டின் பிரதமராக இருந்த தேவகவுடாவோ கன்னட இனவாதக் குழுவின் தலைவர் போல் பேசுகிறார்.. நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் எஸ்.எம். கிருஷ்ணாவோ கன்னட அடிப்படைவாதக் கட்சியின் தலைவரைப் போல செயல்பட்டு வருகிறார். தமிழகத்துக்கு காவிரி நீரைத் தரமறுக்கும் கர்நாடகத்துக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியது தமிழர்களின் வரலாற்றுக் கடமை. தமிழ்நாட்டின் நிலக்கரியை தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் வெட்டியெடுத்து அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கர்நாடகத்துக்கு நாம் கொடுத்து வருகிறோம்.
தமிழ்நாடே இருளில் மூழ்கிக் கிடக்க தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து தமிழகத்தை பாலை நிலமாக்கி வரும் கர்நாடகத்துக்கு மட்டும் ஏன் மின்சாரத்தை வழங்க வேண்டும்? தமிழகத்துக்கு காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு தமிழ்நாட்டின் நெய்வேலியில் இருந்து மின்சாரம் செல்வதைத் தடுத்து நிறுத்த அக்டோபர் 20-ந் தேதி நெய்வேலியில் ஒரு லட்சம் தமிழர்களைத் திரட்டி மாபெரும் முற்றுகைப் போர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற இருக்கிறது. நெய்வேலி அரசு பொதுமருத்துவமனையில் இருந்து காலை 9 மணி அளவில் எனது தலைமையில் பேரணியாகத் தொடங்கி நெய்வேலி முதலாவது அனல்மின் நிலையம் முன்பு ஒன்று திரண்டு கர்நாடகத்துக்கு கொண்டு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்துவோம்!
விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் குடும்பம் குடும்பமாக நெய்வேலியின் ஒன்று கூடுவோம்! தமிழராய் ஓரணியில் திரள்வோம்! என்று அதில் கூறப்பட்டுள்ளது.