கொலையுண்டதாக கருதப்பட்ட மாணவர் காதலியுடன் வந்தார்: பந்த் நடத்திய கட்சிகள் திகைப்பு!
பாட்னா: பீகாரில் பள்ளி மாணவர் ஒருவர் காதல் விவகாரத்தில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக கருதி வன்முறை ஏற்பட்டது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 2 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சியினர் நேற்று பீகாரில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட மாணவர் உயிரோடு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் குமார்(17) அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் படித்த 9ம் வகுப்பு மாணவியான பிரீத்தி சவுத்ரி என்பவரை காதலித்துள்ளார். இதற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த மாதம் (செப்டம்பர்) 7ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக இரு வீட்டாரும், போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், தலை துண்டிக்கப்பட்ட ஆண் பிணம் ஒன்று மதுபனி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த பிணத்தை பார்த்த பிரசாந்த் குமாரின் பெற்றோர், அது தங்களின் மகனின் உடல் தான் என்று அடையாளம் காட்டினர். மேலும் காதல் விவகாரம் தொடர்பாக, அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டினர். இதில் ஆவேசமடைந்த பிரசாந்த் குமாரின் உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் மதுபனி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், 5 காவல் நிலையங்கள் ஆகியவற்றிற்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீவைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியாகினர். இந்த காதல் விவகாரமும், வன்முறை சம்பவமும் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமாரின் ஆட்சியை குற்றச்சாட்டும் வகையில், எதிர்கட்சியினர் தரப்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
பாட்னாவில் லல்லு பிரசாத் யாதவ் ஆதரவாளர்களை திரட்டி கண்டன ஊர்வலம் நடத்தினார். பந்த் காரணமாக நேற்று மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. அரசு மற்றும் தனியார் அலுவலங்கள், வங்கிகள், கடைகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட லல்லு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பீகாரில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட மாணவர் பிரசாந்த் குமார், அவரது காதலியுடன் டெல்லியில் நேற்று பிடிப்பட்டார். டெல்லியில் ஒரு டீக்கடையில் நின்ற போது, இருவரும் போலீசாரிடம் சிக்கினர். போலீசார் இருவரிடம் விசாரித்தனர்.
அப்போது நடந்த சம்பவங்களை கூறிய இருவரும், வீட்டிற்கு பயந்து தலைமறைவாக இருந்ததாக கூறினர். இதையடுத்து மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு, கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று மாற்றப்பட்டு சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட மாணவருக்காக மாநில அளவில் வன்முறை நடைபெற்று 2 பேர் பலியான நிலையில், அந்த மாணவர் உயிரோடு வந்த செய்தி பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.