தூத்துக்குடியில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சீதோஷண நிலை மாற்றம் காரணமாக காய்ச்சலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிசிக்சை பெற்று வருகின்றனர்.
இதில் பல நோயாளிகளும் டைபாய்டு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் குழந்தைகள் தான் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 10 பேரின் ரத்த மாதிரிகள், மருத்துவ பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிவில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தூத்துக்குடி மாவட்ட சுகாதார துறையினர் உறுதி செய்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் இடையே அமைச்சர் செல்லப்பாண்டியன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் இது குறித்து மருத்துவமனை 'டீன்' எட்வின் ஜோ, மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, மாநகராட்சி கமிஷனர் மதுமதி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.