கிரானைட் மோசடி: பிஆர்பி நிறுவன அதிபர் பழனிச்சாமியின் உறவினர்கள் கைது
மதுரை: கிரானைட் மோசடி தொடர்பான வழக்கில் பி.ஆர்.பி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த அவரது உறவினர்கள் உட்பட 5 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது தொடர்பாக மோசடி செய்து, பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக, முன்னாள் மாவட்ட கலெக்டர் சகாயம், அரசுக்கு அறிக்கை அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பலரும் கைது செய்யப்பட்டனர். இதில் பிஆர்.பி கிரானைட்ஸ் உரிமையாளர் பழனிச்சாமியும் ஒருவர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கிரானைட் மோசடியில் ஈடுபட்ட இவரது உறவினர்கள் பலரும் தலைமறைவாக உள்ளனர்.
குறிப்பாக பழனிச்சாமியின் மகன்கள் செந்தில், சுரேஷ் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர். இந்த நிலையில் பழனிச்சாமியின் அக்காள் மகன் அமரேசனின் மகன் மகாபிரபு(24), உறவினர் தனபாலின் மகன் பிரதீப்குமார்(23) மற்றும் ஊழியர்கள் சுகந்தன்(27), ராமகிருஷ்ணன்(33), பாலமுருகன்(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.