இதெப்படி இருக்கு... ரேஷன் அரிசியை கடத்தி சென்று மாவாக்கி விற்ற 5 பேர் கைது!
நெல்லை: நெல்லையில் ரேஷன் அரிசியை கடத்தி சென்று அதை மாவாக அரைத்து விற்பனை செய்து வந்த 5 பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கும்பல் ரேஷன் அரிசியை கடத்தி சென்று மாவு தயாரித்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமை பொருள் குற்றப் புனலாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கரிவலம்வந்தநல்லூர் அருகே பெருமாள்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கடத்தல் கும்பல் முகாமிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ரேஷன் அரிசி, அவற்றை அரைக்க பயன்படுத்திய எந்திரங்கள், விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்த மணிகண்டன், கருணாகரன், மதுரையை சேர்ந்த பாண்டி விஜயன், ராஜபாளையம் கணேசன், மற்றும் குருசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் கருணாகரன் கார் டிரைவர் மணிகண்டனும், குருசாமியும் பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வருவதும், பாண்டி விஜயன், கணேசன் ஆகியோர் அவற்றை மாவாக்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதே கும்பல் ஏற்கனவே மதுரையில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.