விஜயகாந்தின் ‘நாய்’ பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம்- மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து வருவது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் விஜயகாந்திடம் கேள்வி எழுப்பினர். இிற்கு பதிலளிக்க மறுத்ததுடன் பத்திரிகையாளர்களை 'அவங்க கிட்ட போய் கேளுங்கய்யா...." என்று கூறியதுடன், நாய்.. நாய்... உன் கம்பெனியா சம்பளம் கொடுக்குது என்று எகிறினார். மூத்த பத்திரிகையாளர் பாலுவை தேமுதிக எம்.எல்.ஏ. முருகேசன் தாக்கி காயப்படுத்தினார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
இதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் வெளியிட்ட் அறிக்கையில்,ஒரு சட்ட மன்றத் தலைவர் இப்படி நடந்துக் கொள்வது முறைதானா? விஜயகாந்தின் செயல்பாடுகள் பத்திரிகை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால். இது பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளையை நெரிப்பது போன்று உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் போராட்டம்
இதேபோல் ஜெயா டிவி நிருபர் பாலு தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தலைவர் சுபாஷ் தலைமையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய விஜயகாந்த்தை கண்டித்தும், தள்ளிவிட்ட எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தலைவர் சுபாஷ் தெரிவித்துள்ளார்.
ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியன்
ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆப் தமிழ்நாடு சங்கத்தின் தலைவர் ஏ.ஜெ.சகாயராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது. தமது அநாகரிக செயலுக்காக விஜயகாந்த் இன்றே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில், பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.