புயல் நிவாரணம்... முதல்வர் மனம் நோகாமல் அறிக்கை வெளியிடும் தா. பாண்டியன்
சென்னை: புயல் மழை வந்தால் உரிய நிவாரணம் கோரி அறிக்கை வெளியிடுவது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்றுதான்! ஆனால் இத்தகைய அறிக்கையிலும் கூட தமிழக முதல்வரின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் அப்படி ஒரு 'அக்கறை' காட்டியிருக்கிறார்.
சென்னையில் தா. பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், நிலம் புயல் காற்றாலும், அதற்கு முன்னதாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி இல்லாத நிலையில் ஒரு போக சாகுபடி செய்திட நேரடி விதைப்பின் மூலமும் நடவு செய்தும் பயிரிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை உள்ளது. இப்பாதிப்பை சரியாக கணக்கிட்டு உரிய நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.
டெல்டா விவசாயத்தை பாதுகாக்க உரம், பூச்சி மருந்துகளை மானியமாக உடன் வழங்குவதுடன், வேலையின்றி உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 15 நாள் ஊதியத்தையாவது (நாள் ஒன்றுக்கு ரூ.132) வழங்கிட வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்யவும், மின் கம்பங்களை சரிசெய்து உடன் மின் இணைப்பு வழங்கவும் சாலைகளை செப்பனிடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வதுடன், புயல், மழை, வெள்ள பாதிப்புக்குரிய நிவாரணத்தை மத்திய அரசு முழுமையாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications