2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்பவே 55 வேட்பாளர்களை அறிவித்த முலாயம்!
லக்னோ: இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மக்காளவைத் தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது சமாஜ்வாடி கட்சி. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சி வெளியிட்டிருக்கிறது.
லக்னோவில் செய்தியாளர்கள் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் யாதவ் 55 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை வெளியிட்டார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிர தேசத்தின் மணிபுரி தொகுதியிலும், அவரது மருமகளும் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் கன்னோஜ் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் தர்மேந்திர யாதவ் பதயூன் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ரேபரேலி, அமேதி
ஆனால் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகியவற்றுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
2 ஆண்டுக்கு முன்பே
இந்திய வரலாற்றிலேயே ஒரு முக்கியமான அரசியல் கட்சி, தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருப்பது இது முதல் முறை என்றாலும் தேர்தல் ஜுரத்துக்காக அடிக்கல் நாட்டியிருக்கிறது சமாஜ்வாடி. மேலும் சமாஜ்வாடி கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் 2013ஆம் ஆண்டிலேயே மக்களவைக்கான தேர்தல் நடைபெறக்கூடும் என்றும் யூகிக்கப்படுகிறது.
பார்த்துங்க... தொகுதி மக்கள் வேட்பாளர் பெயரை மறந்துடப் போறாங்க! வேட்பாளரும் தொகுதியை மறந்துடப் போறாரு!