கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது குண்டர் சட்டம்: வைகோ கண்டனம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தை அகற்றக்கோரி, அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கமும், அணு உலை எதிர்ப்பாளர்களும் தொடக்கத்தில் இருந்து அறவழியில் போராடி வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் பங்கேற்ற காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரும், ஓராண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத அறப்போராட்டமும், இதுவரை இந்தியாவில் எங்கும் நடைபெறாத உறுதியும் தியாகமும் நிறைந்த போராட்டம் ஆகும். ஆனால் மத்திய அரசு போராட்டக்காரர்களை இழிவுபடுத்தியும், போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் வருகிறது.
தமிழக அரசும், மக்கள் அச்சம் தீரும் வரை அணு உலையை திறக்க மாட்டோம் என்று கூறிவிட்டு, பின்னர் அணு உலையை இயக்குவதற்கு ஆதரவு அளித்தோடு. இந்தப் பிரச்சினையின் தொடக்கத்தில் இருந்தே காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி வருகிறது.
கடந்த 2011 செப்டம்பர் தொடக்கத்தில், கூடங்குளம் வட்டாரத்தில் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்களை மிரட்டுவதற்காக ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்தது. இதுவரை, 350-க்கும் மேற்பட்ட வழக்குகள் மொத்தத்தில் 2 லட்சம் பேர் மீது போடப்பட்டு உள்ளன. தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 8 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். தாய்மார்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடக்குமுறையின் உச்சகட்டமாக, தற்போது அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவி சிறையில் அடைக்கத் தொடங்கி விட்டனர்.
இடிந்தகரையைச் சேர்ந்த 68 வயதான லூர்துசாமி என்பவரும், 40 வயதான நசரேன் என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், நவம்பர் 15 அன்று வைராவிக்குளத்தைச் சேர்ந்த தவசிகுமார் மீதும் கூடங்குளத்தைச் சேர்ந்த சிந்துபாரத் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.
அடக்குமுறையாலோ அச்சுறுத்தலாலோ எதேச்சதிகார மிரட்டலாலோ, எந்த உரிமைக் கிளர்ச்சியையும் நசுக்க முடியாது. காவல்துறையினர் மேற்கொண்டுவரும் அராஜக அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, பொய் வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.