தீபாவளி.. மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த 73 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
மதுரை: மதுரையில் தீபாவளி நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 73 ஆம்னி பஸ்களுக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க போக்குவரத்துத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியே கோயம்பேட்டில் முகாமிட்டு சோதனைகள் மேற்கொண்டு, தவறு செய்த பல பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
மகுரையிலும் இதே போன்ற சோதனை நடந்தது. அப்போது விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்பட்ட 73 ஆம்னி பஸ்களுக்கு வரி மற்றும் அபராதமாக ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 900 விதிக்கப்பட்டது. இந்தப் பணம் வசூலிக்கப்பட்டுவிட்டது.
அதே போல எந்த அனுமதியும் இல்லாமல் இயக்கப்பட்ட மேக்ஸி கேப் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ராவின் தீவிரத்தால் தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.