கொலை, கொள்ளை வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகள் இணையதளம் மூலம் கண்காணிப்பு
சென்னை: கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்கள் மற்றும் ஜாமீனில் இருப்பவர்களை இணையதளம் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தமிழக காவல்துறை விரைவில் செயல்படுத்தவுள்ளது.
தமிழக காவல்துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா இதற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி வருகிறார். இந்நிலையில் முக்கிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகளை இணையதளம் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த தேவையான முயற்சியில் மாநில குற்ற ஆவணகாப்பகம் ஈடுபட்டுள்ளது.
காவல்துறையை நவீனபடுத்தும் திட்டத்தின்கீழ் அனைத்து காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதுடன் இணையதள வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இணையதள வசதி மூலம் முக்கிய கைதிகளை கண்காணிக்கும் திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது.
சென்னை நகர் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு மாநில குற்ற ஆவணகாப்பக இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆசிஷ் பெங்ரா தலைமை வகித்தார். இதையடுத்து இத்திட்டம் குறித்த விசேஷ பயிற்சி முகாம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த முகாமில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொள்கின்றனர்.