அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக பிரச்சனையில் தமிழக அரசு உடனை தலையிட்டு நிர்வாகத்தை செப்பனிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அண்ணாமலை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான உயர்கல்வி நிறுவனமாகும். அதில் சுமார் 3,600 பேராசிரியர்களும், சுமார் 10,000க்கும் அதிகமான ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். அது மட்டுமின்றி பல்கலைக்கழகத்தை நம்பி சுமார் 5,000க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பல்கலைக்கழகத்தில் தற்பொழுது சுமார் 30,000 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூர கல்வி படிப்பு மூலமும் படித்து வருகின்றனர்.
பல்லாண்டு காலமாக தனித் தன்மையோடு இயங்கி வருகிற பல்கலைக்கழகமாகவும் இது விளங்குகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரியாக செயல்படாமல் வேண்டுமென்றே இதர அமைப்புகளின் மீது பழி போட்டு ஆட்குறைப்பு செய்வதும், சம்பளத்தை குறைப்பதும், அதன் விளைவாக பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுவதும் எந்த வகையிலும் நியாயமான செயல்களாகாது. நிர்வாகம் செய்த தவறுக்கு பணியாளர்களும், படிக்கும் மாணவர்களும் எப்படி பொறுப்பாவார்கள்?
ஒரு புறத்தில் நிர்வாகம் சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் பல்கலைக்கழகத்திற்கு மூடு விழா செய்துவிட்டது. மறுபுறத்தில் இதனால் பல்லாயிரக் கணக்கான மாணவர்களுடைய படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றுபவர்களின் குடும்பங்களும் நிற்கதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே நிர்வாக சிக்கலில் தவிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழக பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன் கருதி நிர்வாகத்தை செப்பனிடவும், நிதி நிலையை சீரடையச் செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.