அன்னிய நேரடி முதலீடு விவகாரம்: திமுகவை சமாதானப்படுத்த காங்கிரஸ் தீவிரம்
சென்னை: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் தலைமையும் பிரதமரும் பேச்சு நடத்தி சமாதானப்படுத்துவார்கள் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவும் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்க்கிறது. மம்தா தீர்மானம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரித்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக உள்ளது.
இதையடுத்து திமுகவை சமரசம் செய்யும் வேலைகளை காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடங்கியுள்ளனர்.
இந் நிலையில் கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பிய ஆனந்த் சர்மா விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் கூட்டணியில் திமுக மிகவும் மதிக்கத்தக்க கட்சி. எனவே, அன்னிய முதலீடு விவகாரத்தில் திமுகவை சமரசப்படுத்தும் முயற்சியில் பிரதமர் மன்மோகன் சிங் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து திமுக மேலிடத்துடன் பிரதமரும், காங்கிரஸ் மேலிடமும் பேச உள்ளனர்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேச தூதர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கருணாநிதியை சந்தித்து சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டின் நன்மைகள் குறித்து விளக்கி சமரசம் செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications