புத்துணர்வு முகாமிற்கு செல்ல நெல்லை, தூத்துக்குடி, குமரி யானைகளுக்கு லாரி ஏறும் பயிற்சி
நெல்லை: மேட்டுப்பாளையத்தில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள புத்துணர்வு முகாமில் பங்கேற்க நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 11 யானைகள் செல்கின்றன. இதையொட்டி அவைகளுக்கு லாரிகளில் ஏற பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான முகாம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள பவானி ஆற்றக்கரையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது.
48 நாட்கள் நடக்கும் இந்த முகாம் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 45 கோயில் யானைகள் பங்கேற்கின்றன. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 11 யானைகள் வரும் 24ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு தனித்தனி லாரிகளில் மேட்டுப்பாளையத்திற்கு அழைத்து செல்லப்படுகிறது. யானைகள் செல்லும் லாரிகளுக்கு முன்னும் பின்னும் அறநிலையத்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் செல்லும். முகாமில் யானைகளுக்கு மூலிகை உணவுகள், மருந்துகள் மற்றும் புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்த முகாமுக்கு புறப்படும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட யானைகளுக்கு நேற்று முதல் லாரியில் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.