செல்போன் பேசியபடி வண்டி ஒட்டிய டிரைவர்: பள்ளி வேன் கவிழ்ந்து 5 பேர் காயம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி வேன் டிரைவர் செல்போன் பேசியபடி வண்டி ஓட்டியதால், வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஒரத்தநாட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சொந்தமான வேன் மூலம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த குழந்தைகளை தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இன்று காலை ஒரத்தநாடு அருகே உள்ள தெற்கு நத்தத்திற்கு குழந்தைகளை ஏற்ற வேன் சென்றது. அங்கு 5 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வழியில் மற்ற குழந்தைகளை ஏற்ற வேன் வந்து கொண்டிருந்தது.
தெற்கு நத்தம்-ஆழி வாய்க்கால் இடையே வேன் வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த வாய்க்காலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 5 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த
அகிஷ், அன்பு, அறிவு, சந்தோஷ்பதி, மகிதா மாணவர்கள் அனைவரும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. படிக்கும் மாணவ, மாணவிகள் ஆவார்கள்.
வேன் வாய்க்காலில் கவிழ்ந்ததும் டிரைவர் தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் குழந்தைகளின் பெற்றோர் பதறியடித்து கொண்டு அங்கு ஓடிச்சென்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேனை ஓட்டிய டிரைவர் செல்போனில் பேசியபடி வண்டி ஒட்டியதாலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டை வழியே மாணவி சுருதி விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளி வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியாது என்று கூறி தனியார் பள்ளி வாகனங்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரத்தநாடு பள்ளி வேன் டிரைவர் செல்போனில் பேசியபடி வேனை ஓட்டிச்சென்று வேன் வாய்க்காலில் கவிழ்ந்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. அஜாக்கிரதையாக இருந்த வேன் டிரைவர் மீது பள்ளி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் வலியுறுத்தலாகும்.