2013 ஜூன் முதல் தமிழகத்தில் மின்தடையே இருக்காதாம் தெரியுமா: அமைச்சர் 'நத்தம்' சொல்லிட்டார்!
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் சென்னையில் நிலைத்த நீடித்த எரிசக்தி மேலாண்மையின் புதிய யுகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
அதில் கலந்து கொண்ட மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது,
தமிழகத்தின் மின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள இடைவெளி 4,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதே காரணம். மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்டும் அது எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
வட மாநில மின் வழித் தடங்களுடன் தென் மாநிலங்களை முழுமையாக இணைக்காததால் தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து தமிழகத்தால் மின்சாரம் பெற முடியவில்லை. தற்போது வட மாநில மின் கட்டமைப்பில் இருந்து ஒரேயொரு வழித் தடம் தான் தென் மாநிலங்களை இணைக்கிறது. இந்த ஒரே வழித்தடத்தின் மூலம் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் ஆந்திராவுக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மேலும் ஒரு வழித் தடத்தை அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்து. இதையடுத்து துவங்கப்பட்ட திட்டப்பணிகள் வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது. மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் ஜூன் மாதம் முதல் 1,880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது தவிர சில தனியார் உற்பத்தியாளர்கள் வரும் 2013ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மின் உற்பத்தியை துவக்குகின்றனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் முழு மின்சாரத்தையும் அரசுக்கே அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு கிடைத்தால் தற்போதுள்ள 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை வரும் ஜூன் மாதம் முதல் சீராகிவிடும். மேலும் 500 மெகாவாட் மின்சாரமும் கையிருப்பு இருக்கும்.
எனவே வரும் டிசம்பர் மாதம் முதல் மின்வெட்டு பிரச்சனை படிப்படியாக குறைவதோடு 2013ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக மாறும் என்றார்.