குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸுக்கு சவால் விட்டுவிட்டு வேட்புமனு தாக்கல் செய்த மோடி
அகமதாபாத்: சட்டசபை தேர்தலில் மணிநகரில் போட்டியிடும் குஜராத் முத்லவர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
குஜராத் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. வரும் 20ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் மணிநகர் தொகுதியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார் இந்நிலையில் மணிநகரில் போட்டியிட அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நரேந்திர மோடி தான் குஜராத் கலவரத்தின் சூத்திரதாரி, இந்துக்களின் வன்முறையை கண்டுகொள்ளாமல் இருக்க உத்தரவிட்டவர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் மோடியை எதிர்த்து மணிநகரில் போட்டியிடுகிறார். ஸ்வேதாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மோடி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது,
குஜராத்திற்கு காங்கிரஸ் என்ன செய்தது என்பதை முடிந்தால் நிரூபித்துக் காட்டட்டும். வாக்கு வங்கி அரசியலை வைத்து அல்ல மாறாக முன்னறேறத்தை அடிப்படையாக வைத்து தேர்தலை சந்திப்போம். தேர்தல் பிரச்சாரத்தில் பணத்தை செலவு செய்வதால் காங்கிரஸால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது. எவ்வளவு பணத்தை வாரி இரைத்தாலும் குஜராத்தில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது. காங்கிரஸுக்கு தைரியம் இருந்தால் சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலை குஜராத் முதல்வர் வேட்பாளராக்க வேண்டியது தானே என்றார்.












Click it and Unblock the Notifications