நரேந்திர மோடிக்கு எதிராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மனைவியை களம் இறக்கிய காங்.
நரேந்திர மோடியுடன் மோதி கடைசியில் மத வன்முறைக்குப் பலியானவர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியா. அவர் மனைவி தற்போது அகமதபாத்தின் எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதியில் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலின் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரது சாவுக்கு மோடியே காரணம் என்று பாண்டியாவின் குடும்பம் புகார் கூறி வருகிறது.
யார் இந்த சஞ்சீவ் பட்?
இதேபோல் நரேந்திர மோடிதான் குஜராத் கலவரத்தின் சூத்திரதாரி, இந்துக்களின் வன்முறையை கண்டுகொள்ளாமல் இருக்க உத்தரவிட்டவர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி தான் சஞ்சீவ் பட். நீதிமன்றங்களிலும் விசாரணை அமைப்புகளிடமும் மோடிதான் கலவரத்தின் மூலகாரணம் என்று குற்றம் சாட்டியவர். இதற்காவே அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டவர். அப்போது மோடி அரசாங்கத்தால் மிரட்டப்பட்டவர் சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா. இப்போது இந்த சஞ்சீவ்பட் மனைவி ஸ்வேதா பட்டையே நரேந்திர மோடிக்கு எதிராக மணிநகர் தொகுதியில் களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் உச்சகட்ட பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது குஜராத். இன்று நல்ல நேரமான 12.39 மணிக்கு நரேந்திர மோடி வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறாராம்!