பக்தர்கள் கூட்டம் அலைமோதியும் சபரிமலை கோவில் வருமானம் சரிவு
திருவனந்தபுரம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதியும் சபரிமலை கோவில் வருமானம் குறைந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜையை முன்னிட்டு சுமார் 60 நாட்களுக்கு மேல் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் கோவிலுக்கு லட்சக் கணக்கில் வரும் பக்தர்கள் காணிக்கை அளிப்பார்கள்.
இந்த ஆண்டின் மண்டல கால பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. வழக்கம் போல அங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கடந்த 11 நாட்களில் கோவிலின் மொத்த வருமானம் ரூ.22.42 கோடி ஆகும். கடந்த ஆண்டு இதே சமயத்தில் ரூ.28.28 கோடி வருவாய் கிடைத்தது. கடநத ஆண்டு வருமானத்தை விட தற்போது ரூ.5.86 கோடி குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் 10 நாட்களில் காணிக்கையாக ரூ.10.36 கோடி கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.9.354 கோடி கிடைத்துள்ளது. அப்பம் விற்பனை மூலம் கடந்த ஆண்டு ரூ.2.59 கோடி கிடைத்தது. இந்த ஆண்டோ வெறும் ரூ.1.94 கோடி கிடைத்துள்ளது. அரவணை பிரசாதம் மூலம் கடந்த ஆணடு ரூ.12.54 கோடி கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.9.83 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அர்ச்சனை மூலம் கடந்த ஆண்டு ரூ.2.22 லட்சம் கிடைத்தது. இந்த ஆண்டு அர்ச்சனை வருமானமும் ரூ.97,325க குறைந்துள்ளது.